இன்னும் 10 மாதங்கள் கடந்தால், எல்லாக் கிராமப்
பஞ்சாயத்துகளுக்கு உள்ளும் பல்லாயிரம் கோடி பணம் பாயப்போகிறது. ஆனால்,
அந்தக் கிராமங்கள் அப்படியேதான் இருக்கப்போகின்றன. எத்தனையோ திட்டங்கள்,
திறப்பு விழாக்கள் நடக்கின்றன. இருந்தும், கிராமங்கள் இன்னும் செழிக்காதது
ஏன்?செழித்த நகர்மயமாக்கல், கிராமங்களையே நம் நினைவுகளில் இருந்து
மறக்கடிக்கிறது. தங்க நாற்கரச் சாலை வந்த பிறகு, கடந்து போகும்போதுகூட
தரிசிக்க முடியாதவையாக தமிழக கிராமங்கள் நம் நினைவுகளில் இருந்து
அந்நியமாக்கப்படுகின்றன. நெல் விளைச்சலை ஃபார்ம் ஹவுஸில் பார்த்து... ஆடு
மாடுகளை ரிசார்ட்ஸ்களில் காட்டி... இயற்கைக்கு விரோதமாக நகரங்கள்
மாறும்போது, கோடிக்கணக்கான கிராமத்து மக்கள்... செத்து உதிர்ந்துகொண்டு
இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தலைகளில் கடனைக் கட்டித்தான் எல்லாத்
திட்டங்களும் போடப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல்களும் அவர்களைத்
திருப்திப்படுத்தவே நடத்தப்படுகின்றன. ''ஒரே நாட்டுக்குள் இரண்டு நாடுகள்
இருக்கப்போகின்றன'' என்று 25 ஆண்டுகளுக்கு முன்னால் பொருளாதார நிபுணர் கள்
சொன்னது அப்படியே நடந்துவிட்டது. இனி மேலும் விழித்துக்கொள்ளாவிட்டால்,
நாடே நரகமாகிவிடும்.
என்ன செய்யலாம் கிராமங்களை... கிராம மக்களுக்கு என்ன செய்யலாம் என்று
உள்ளாட்சித் தேர்தலில் வென்று வருபவர்கள் யோசிக்கச் சில வார்த்தை கள்!
1. ஊர்கள்தோறும் இரண்டொரு பள்ளி!
கல்வியை அரசாங்கம் கை கழுவிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
தனியாருக்குத் தாரை வார்த்ததால், தங்களுக்கு வசூல் செய்ய வசதியான
நகர்ப்புறங்களில் மட்டும் பள்ளிக்கூடங்களை நிறுவினார்கள். கிராமங்களில்
தேவையான கட்ட ணங்களை வாங்க முடியாது என்பது அனைவரும் அறிந்தது. அவர்கள்தான்
செய்யவில்லை. அரசாங்கமாவது செய் ததா என்றால் அதுவும் இல்லை. நான்கில்
இருந்து ஏழு கி.மீ. தூரம் வரைகூட நடந்து போய் ஆரம்பக் கல்வியைப் படிக்கும்
நிலையில்தான் இன்னமும் தமிழகக் கிராமங்கள் இருக்கின்றன. 'அடுத்த ஊர்ல போயி
படிக்கிறதுக்கு சும்மாவே இருக்கலாம்’ என்ற வைராக் கியத்துக்காகவே
பிள்ளைகளைப் படிக்க அனுப்பாமல் இருக்கும் கிராமத்தவர்கள் இன்னும்
இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு வரைக்குமான பள்ளிக்கூடம் இல்லாத கிராமம்
இல்லை’ என்ற நிலையை உருவாக்கினால் மட்டும்தான், கிராமத்தின் எதிர்காலத்தைக்
காப்பாற்ற முடியும். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி,
தமிழகக் கிராமங்களில் சுமார் 36 லட்சம் குழந்தைகள் இருக்கிறார்கள். அந்தக்
கிராமங்களின் எதிர்காலம் இவர்களை நம்பித்தான் இருக்கிறது. இவர்களைக்
காப்பாற்ற முதல் தேவை... பள்ளிக்கூடங்கள்!
2. சுற்றும் முற்றும் அசுத்தம்!
மனித மலம், மாட்டுச் சாணி, குப்பைக்கூளங்கள், தெருவின்
மையத்தில் ஓடும் சாக்கடைகள்... இவைதான் இன்றைய கிராமத்தின் முகமும்
முகவரியும். நகரத்துக் கும் கிராமத்துக்கும் இருக்கும் முதல் வித்தியாசம்
இதுதான். நகரத்தில் இருப் பதுபோல சுத்திகரிப்பு விஷயங்கள், நகராட்சி
மற்றும் தனியார் பணியாளர்கள் இல்லை. அதைச் செய்யப் பண ஒதுக்கீடும் இல்லை.
ஏனென்றால், சுகாதாரம் என்ற விஷயத்தையே யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது
இல்லை. ''ஊருன்னு இருந்தா, அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்யும்'' என்று
மனதளவில் சமாதானங்கள் செய்யப் படுகின்றன. ஆனால், இந்தச் சுகாதாரமின்மைதான்
கிராமத்து மனிதர்களுக்குத் தீராத நோய்களை உற்பத்தி செய்கின்றன. அசுத்தமான
சூழல் காரணமாகத்தான் இனம் காண முடியாத நோய்களுக்கு இவர் கள் ஆளாவதும்,
அதற்கான உடனடிச் சிகிச்சைகளைக்கூட அருகிலேயே பெற முடியாத நிலையும் இன்னமும்
தொடர் கின்றன. எனவே, அனைத்துக் கிராமங் களுக்குமான சுகாதாரத் திட்டம்
உருவாக் கப்பட வேண்டும்!
3. வசதிக்குத் தகுதி இல்லையா?
விட்டுவிட்டு மின்சாரத்தை கட் செய்தால், நகரத்தில்
திடீரெனச் சாலை மறியல் நடக்கிறது. குழாயில் தொடர்ந்து மூன்று நாட்கள்
தண்ணீர் வரவில்லை என்றாலோ, லாரி தண்ணீர் தரப்படவில்லை என்றாலோ, பஸ் மறியல்
நடக்கிறது. ஆனால், இரண்டு மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாமல், தினமும்
நான்கு ஐந்து கி.மீ. அலைந்து குடிநீரை எடுத்து வரும் மக்கள் வாழும்
கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. அவர்களால் சாலை மறியல் செய்ய முடியாது.
ஏனென்றால், அங்கு சாலைகளே இல்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை
அதிகாரியைப் போய்ப் பார்த்து மனு கொடுப்பதோடு திருப்தி
அடைந்துவிடுகிறார்கள். மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, சாலைகள் இல்லை,
பொதுக் கழிப்பறைகள் இல்லை, பள்ளிகள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை... இதை
எல்லாம் யார் செய்ய வேண்டும் என்பதும் தெரியவில்லை என்ற நிலைதான் பல்வேறு
கிராமங்களில் இருக்கிறது. 'ஒருங்கிணைந்த திட்டங்கள்’ ஆண்டுதோறும்
போடப்படுகின்றன. எந்த கிராமத்துக்கு என்பதுதான் தெரியவில்லை. தமிழகத்தில்
22 லட்சம் குடிசைகள் இருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். சோறு இல்லாத
வீடுகள், வீடே இல்லாத மனிதன் என்பது இன்றைய யதார்த்தம்!
4. விரக்தியான விவசாயம்!
கடந்த வாரம்தான் முதல்வர் ஜெயலலிதா ஓர் அறிக்கை
விட்டிருந்தார். நெல் உற்பத்தி குறைந்துவிட்டது என்று அதில் வருத்தப்பட்டு
இருந்தார். நெல் உற்பத்தி மட்டும் அல்ல; தானியப் பயிர்கள் உற்பத்தியும்.
ஏன், காய்கறிகள் உற்பத்தியும் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இருபது,
முப்பது ஆண்டுகளுக்கு முன் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருந்தவர்கள்கூட பெரிய
குடும்பத்தைக் காப்பாற்றும் வசதியைப் பெற்றவர்களாக இருக்க முடிந்தது.
ஆனால், இன்று விவசாயம் பார்ப்பதைவிட நிலத்தைச் சும்மா போட்டு இருந்தாலே
நிம்மதி என்று நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு விவசாயம் செய்வது, அதிக
செலவான காரியம் ஆகிவிட்டது. நவீன வேளாண்மை என்ற பெயரில், ரசாயன உரங்கள்,
பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி நில வளத்தைப் பாழாக்கினோம். இந்த
உரங்களும் கட்டுபடியாகும் விலையில் கிடைக்கவில்லை. விவசாயம் பார்த் துக்
கிடைக்கும் லாபம், கடனைக்கூட அடைக்க முடியாத நிலையில் இருப்பதால், விவசாயமே
விரக்தியான விஷயம் ஆகி விட்டது. எனவே, உற்பத்தியை அதிகரிக்க, நிலம்
வைத்திருக்கும் அனைவரும் சாகுபடியில் இறங்க, முதலில் நம்பிக்கை ஊட்டப்பட
வேண்டும்!
5. தரகர்கள் காட்டில்தான் மழை!
உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு உரிய விலை
கிடைக்கவில்லை. யாருக்கும் கிடைக்கவில்லை என்றாலாவது பரவாயில்லை.
விவசாயிகளுக்கு மட்டும்தான் கிடைக்கவில்லை. இடைத்தரகர்கள், மொத்தக்
குத்தகைதாரர்கள், மொத்த விற்பனையாளர்கள் வாரிக் குவிப்பதை விவசாயி
நேரடியாகப் பார்க்கிறான். இந்த ஆதங்கமும் விவசாயத்தின் முடக்கத்துக்கு
முக்கியமான காரணம். கருணாநிதி முதல்வராக இருந்தபோது உழவர் சந்தைகளைத்
தொடங்கினார். தங்களது விளைச்சலை விவசாயிகளே அருகில் உள்ள சந்தைக்கு
எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம் என்ற நடைமுறை பலருக்கும் உற்சாகத்தை
விதைத்தது. அதைக் காலப்போக்கில் வளர்த்து, காய்கறிகள் என்பதைத் தாண்டி,
அனைத்துப் பொருள்களுக்குமான சந்தையாக ஆக்கி இருக்க வேண்டும். பாழாய்ப்போன
அரசியலுக்குத்தான் அது பிடிக்காதே! ஜெயலலிதா அந்தச் சந்தைகளைக்
கண்டுகொள்ளவில்லை. சில இடங்களில் உழவர் சந்தைகள் வெற்றிகரமாகச்
செயல்படுகின்றன. ஆனால், பல இடங்களில் இருட்டடித்துக் கிடக்கின்றன.
உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று அறிக்கைவிடும் முதல்வர், உழவர்
சந்தைகளை இன்னும் தரம் உயர்த்தி உருவாக்க வேண்டும்!
6. கிராமத் தொழில்கள்
சிறுதொழில்கள், குடிசைத் தொழில்கள், கைவினைத் தொழில்கள்
என எத்தனையோ தொழில்களின் தொட்டிலாக கிராமங்கள் இருந்தன. விவசாயத்தை
அடுத்து, கிராமப் பொருளாதாரத்தைஇவை தான் தூக்கி நிறுத்தின. பால் உற்பத்தி
முதல் மண்பாண்டங்கள் வனைதல் வரை அனைத்திலுமே பெருந்தொழில் மூலதனக் காரர்கள்
புகுந்தார்கள். வீட்டுக்கு 10 லிட்டர் பால் கொண்டுவந்து கொடுத்து தங்கள்
வயிற்றுப்பாட்டை ஓட்டிக்கொண்டு இருந்தவர்கள் தலையில் மண் விழுந்தது.
அனைத்துக் கிராமியப் பொருட்களையும் செய்ய கம்பெனிகள் வந்துவிட்டன.
விசைத்தறியால் நெய்யப்பட்ட துணிகளைக் கைத்தறித் துணிகள் என்று கணக்குக்
காட்டுவதைப் போலத்தான்! அதையும் மீறி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை
எப்படி விற்பனை செய்வது என்றும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை. நகரங்களில்
ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து, இவர்கள் தங்கள்
பொருட்களை விற்பனை செய்தால்... அப்படி ஒரு கண்காட்சி நடப்பதே
பொதுமக்களுக்குத் தெரியாது. இந்த நிலைமையை மொத்தமாக மாற்ற உடனடியான திட்ட
மிடுதல் இருந்தால் மட்டுமே கிராமியப் பொருளாதாரம் தழைக்கும்!
7. கிராமத்தின் முகம் மாற வேண்டும்!
''கிராமங்களை வளர்க்க வேண்டும்'' என்றார் காந்தி.
''கிராமங்களை ஒழிக்க வேண்டும்'' என்று அதில் இருந்து முரண் பட்டுச்
சொன்னார் பெரியார். கிராமங் களை அதன் குணாம்சத்தில் இருந்து மாற்ற முடியாது
என்ற அவர், ''இரண்டு மூன்று கிராமங்களை ஒன்றாகச் சேர்த்து அவற்றைச் சிறு
நகரமாக்கிச் சீர்திருத்தம் செய்தால்தான் வளர்க்க முடியும்'' என்று
சொன்னார். ஒரு பள்ளியை உருவாக்கும் போது, 'இத்தனை லட்சம் போட்டு சின்னக்
கிராமத்துக்குப் பள்ளி கட்ட வேண்டுமா?, இத்தனை கோடி செலவில் சின்னக்
கிராமத்துக்கு மருத்துவமனை கட்ட வேண்டுமா?’ என்ற யோசனையில் தான் பல
திட்டங்கள் செயல்படுத்தப் படாமலேயே முடக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால்,
நான்கைந்து கிராமங்களை ஒன்றிணைத்து இப்படிச் செய்யும்போது, அப்படி ஒரு
கேள்வி எழ வாய்ப்பு இல்லை. மக்கள்தொகை அடிப்படையில் கூடுதல் திட்டங்களையும்
கொண்டுவர முடியும். நகர்ப்புறத் திட்டங்களும் கிராமங்களுக்குள்
புறக்கணிப்பு இல்லாமல் வந்தாக வேண்டும்!
8. தீண்டாமையும் சாதி வெறியும்!
சாதியைக் காப்பாற்றுவதில் சரிபாதிப் பங்கு
கிராமங்களில்தான் இருக்கிறது. சமத்துவபுரம் கட்டுவதாலோ... ஆண்டுக்கு ஒரு
நாள் இரண்டு சாதியினரை அழைத்து இரண்டு பக்கமும் நிறுத்தி போலீஸ்காரரை
மையமாக வைத்து டீ குடிக்க வைப்ப தாலோ, சாதியை ஒழித்துவிட முடியாது. சாதி
மோதல்கள், ஏற்றத்தாழ்வுகள், தன்னு டைய சாதி உயர்வானது, மற்ற சாதியினர்
தனக்கு அடிமைகள் என்கிற மனோபாவம் கிராமங்களின் வளர்ச்சியைத் தடுக்கும்
முக்கியக் காரணிகள். குறிப்பிட்ட பகுதி சாதி மோதல்கள் அதிகம் நடக்கும் இடம்
என்பதால், புதிய தொழிற்சாலைகளை அமைக்க முடியாத நிலை, பல பகுதிகளில் உண்டு.
தனிச் சுடு காடு, தனிக் கிணறு, தனித் தெருக்கள் என அந்தக் கிராமமே தனி
மனநிலையில் மாறித் தனித்து விடப்படுகிறது. இந்தச் சமூக ஏற்றத் தாழ்வை
மொத்தமாக அடித்து நொறுக்கும் காரியங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்!
9. தனி மனித நாட்டாமைகள்!
கலெக்டர், எஸ்.பி., போலீஸ், பஞ்சா யத்துத் தலைவர்,
எம்.பி., எம்.எல்.ஏ. என எத்தனையோ பேர் பதவியால், பட்டத் தால், தேர்தல்களால்
வந்தாலும், பல கிராமங்களை ஆள்வது சில தனிமனிதர் கள்தான். சாதியால்,
பணத்தால், அந்தப் பகுதியில் தான் வைத்திருக்கும் நிலத்தால்,
பாரம்பரியத்தால் நாட்டாமை செய்யும் இத்தகைய மனிதர்கள் வைத்ததுதான்
கிராமங்களில் சட்டம். இதற்கு 'ஊர்ப் பஞ்சாயத்து’ என்றும் சொல்லிக்கொள்
வார்கள். ஊராட்சித் தேர்தலையே நடத் தாமல், ஏலம் விட்டுத் தலைவர் ஆக்கும்
நிலையைச் சத்தம் இல்லாமல் செய்து வருபவர்கள் இவர்கள்தான். கிராமத்து மனிதர்கள் தெளிவு பெற்றால், ஊருக்குள் புதிய மனிதர்கள் வந்தால்,
புதிய திட்டங்கள் அமலானால், இந்த மனிதர்களுக்குப் பிடிக்காது. நிலப்
பிரபுத்துவத்தின் எச்சமாக இன்னும் மிச்சம் இருக்கும் இவர்களுடைய ஆதிக்
கங்களில் இருந்து கிராமங்கள் மீட்டு எடுக்கப்பட வேண்டும்!
10. அவர்களும் அதிகாரம் பெற!
''அறிவாற்றலுக்கும் உழைப்புத் திறனுக் கும் இடையே உண்டான பிரிவினை,
கிராமப்புறங்களை ஒதுக்கித்தள்ளும் ஒரு குற்றத்துக்கு ஆளாக்கிவிட்டது''
என்று சொன்னார் காந்தி. ஒயிட் காலர் வேலை கள் உயர்வானவை என்றும் உடல்
உழைப்புக்காரர்களைக் கேவலமானவர்கள் என்றும் நினைக்கும் காலம் இது.
''நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால், நீங்கள் சோற்றில் கை வைக்க
முடியாது'' என்று ஒரு கவிதை சொல்லும். இதை நகரவாசிகள் உணரவில்லை என்பதைவிட,
ஆட்சியாளர்கள் உணரவில்லை.கிராமத்துல கரன்ட் கட் பண்ணலாம். சிட்டியில வேண்டாம்’ என்று அதிகாரி களும்
அமைச்சர்களும் உத்தரவிடும் பின்னணியில் அப்பட்டமாகத் தெரிவது சமூகத்
தீண்டாமைதான். கிராம மக்க ளின் ஒட்டுமொத்தமான வாக்குகளை அள்ளுபவர்கள்
அதிகாரத்தை அடை கிறார்கள். ஆனால், அந்த மக்கள் எந்த ஆட்சி மலர்ந்தாலும்
அடிமைகளாகவே சபிக்கப்படுகிறார்கள்.பஞ்சாயத்து ராஜ் என்பது பஞ்சாயத்து களில் தேர்தல் நடத்துவதால் மட்டுமே
வந்துவிடாது. கிராமங்களில் மறுமலர்ச்சி யைக் கொண்டுவருவதால்தான் வரும்.
''மனிதனின் பண்புத் தரம்தான் ஒரு நாட்டை மாபெரும் நாடாக ஆக்குகிறது''
என்றார் நேரு. இனிமேலாவது செய்வார் களா?
விகடன்
No comments:
Post a Comment