நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, June 20, 2011

கனிமொழிக்கு விடிவு பிறக்குமா? - ஜாமீன் மனு இன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை

          திமுக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கவுள்ளதால் பரபரப்பும், பதைபதைப்பும் திமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நீதிபதிகள் இருவரும் விலகிக் கொள்ளவே, சிங்வி தலைமையிலான பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வருகிறது.

கனிமொழியின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதில் கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் குற்றவாளிகள். செல்வாக்கு உடையவர்கள். சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவி வாங்கிய ரூ. 214 கோடி கடன் அல்ல, லஞ்சப் பணமே. இந்த நிலையில் இவர்களை விடுவித்தால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்று ஜாமீன் தர எதிர்த்துள்ளது.

இந்த நிலையில் இன்று மனு விசாரணைக்கு வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ஆரம்பத்திலிருந்தே விசாரித்து வருபவர் சிங்வி. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் சிபிஐ விசாரணையையும் அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எனவே கனிமொழி மீதான வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநரான சரத் குமார் ரெட்டியும் கூட்டுச் சதியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

இன்று கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காவிட்டால் அவர் வழக்கு முடியும் வரை வெளியில் வர முடியாத நிலை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment